Sunday, March 30, 2008

தந்தை பெரியார் வரலாறு - 1

என்னைப் பொறுத்தவரையில் ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ்ப் பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன்! - பெரியார்


உலகமே அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பத்து குதிரை சாரட்டுகளில் பறந்துகொண்டு இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம்! மார்க்சும் ஏங்கல்சும் தங்களது நெருப்புரைகளால் அறிவுலகில் பெரும் தீயை ஏற்படுத்தி, ஐரோப்பாவையே அதிர வைத்துக்கொண்டு இருந்த நேரம். இதன் எந்தச் சலனமும் இல்லாமல், உலக வரைபடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில், தாங்கள் யாரென்றே அறியாத பெருங்கூட்டமொன்று இருந்தது. அறியாமை அவர்களின் கண்களைக் கட்டியிருந்தது. மதம் அவர்களது மூளையை அடைத்திருந்தது. சாதி முதுகில் அமர்ந்து அவர்களை முழுவதுமாகக் குனியவைத்திருந்தது. அவர்களது இந்த நிலை, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களுக்கும் சில ஆதிக்கச் சக்திகளுக்கும் வசதியாக இருந்தது. வீதிகளில் அரசர்களைப் போலக் கை வீசி நடந்து வரும் அவர்களைக் கண்டதும், இவர்கள் தங்கள் தலையில் கட்டிய துண்டை அவசரமாக அவிழ்த்துக் கக்கத்தில் சுருட்டிவைத்துக்கொண்டு 'எசமான்' எனக் குனிந்து கும்பிடு போடுவார்கள். ஆனால் எந்தச் சூரியனும் வீதி பார்த்து உதிப்பதில்லை; எந்தக் காற்றும் சாதி பார்த்து வீசுவதில்லை. சாதியின் பெயரால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, மனிதனை மனிதன் இழிவு செய்யும் போக்கு மட்டும் இங்கே தொடர்ந்துகொண்டு இருந்தது. அது மட்டுமா... பெண்ணடிமை, பால்ய விவாகம் மற்றும் இன்ன பிற மூட நம்பிக்கைகளும் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தன. இம்மக்களை மீட்டு சாதி, மதம் என்னும் நோய்களை விரட்டி, மானமும் அறிவும் ஊட்டி, தன்னுணர்வுமிக்க தமிழர்களாக மாற்ற யாரேனும் தோன்றிட மாட்டார்களா எனப் படித்த பண்பாளர்கள் பலர் உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டு இருந்தனர். சாதாரண ஒரு மனிதரால் இது சாத்தியமாகாது. துணிச்சல், அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து, பண பலம் இவற்றுடன் தன்னிகரற்ற சிந்தனை ஆற்றல், அதனை வெளிப்படுத்தும் சொல்வன்மை, வாதங்களை அடித்து நொறுக்கும் தர்க்க ஞானம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் மீதான பேரன்பு, எந்தச் சந்தர்ப்பத்திலும் எதையும் இழக்கத் துணியும் தியாக உள்ளம், தொண்டு மனப்பான்மை என இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான மாமனிதராக அவர் இருந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வைச் சீர்படுத்த இயலும் என்கிற நிலை.
இந்தச் சூழலில்தான், ஈரோடு எனும் வணிக நகரத்தில், 1879 செப்டம்பர் 17ம் தேதியன்று, தமிழர் தம் வாழ்வில் விடிவெள்ளி ஒன்று உதித்தது. அவர்தாம் 'பெரியார்' எனத் தமிழரால் அன்புடன் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி!
பெரியாரின் தந்தையார் பெயர் வெங்கட்ட நாயக்கர். ஈரோட்டில், வெறும் வெங்கட்ட நாயக்கர் என்றால் பலருக்கு அப்போது தெரியாது. கல்தச்சு நாயக்கர் என்றால், உடனே சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், அவரது தொழில் அப்படி. கற்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதில்தான் அவருக்கு அப்போது பிழைப்பு.
வெங்கட்ட நாயக்கரின் பூர்வ கதை, கொடுமையானது. அவருக்குச் சிறு வயதிலேயே அப்பா இல்லை. யாரோ குழந்தை பாக்கியம் இல்லாத ஓர் ஏழைப் பெண்ணால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது கிடையாது. தன் சிறு வயதிலிருந்து 18 வயது வரை கல் உடைக்கும் கூலித் தொழிலாளியாகவே பிழைப்பு நடத்தி வந்தவர் அவர். கல்யாணத்துக்குப் பின், வாழ்க்கையில் கொஞ்சம் வசதி கூடியது. மனைவியாக வாய்த்த சின்னத்தாயம்மாள், சேலம் தாதம்பட்டியைச் சேர்ந்தவர். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கல்யாணத்துக்குப் பின்பு கணவருடன் அவரும் கூலிவேலைக்குப் போகவேண்டி வந்தது. தினமும் 6 அணாவுக்கும், 8 அணாவுக்கும் உயிரை வருத்தி வேலை செய்யும் இந்தப் பிழைப்புக்குப் பதிலாக, சொந்தமாக கட்டை வண்டி ஒன்று வாங்கி ஓட்டினால் என்ன என்று யோசித்தார் வெங்கட்ட நாயக்கர்.
ஆசைப்பட்டபடியே அதுவும் நடந்தது. ஆனால், ராவெல்லாம் புருஷன் வண்டி ஓட்டப் போய்விட, வீட்டில் சின்னத்தாயம்மாள் மட்டும் தனியாக இருக்கவேண்டி வந்தது. இது அவரின் அப்பாவுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை ஏற்படுத்த, உடனே மாப்பிள்ளையைக் கூப்பிட்டு, சொந்தமாக ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்குமாறு சொல்லி, கொஞ்சம் பணமும் கொடுத்தார்.
அடுத்த நாளே, வெங்கட்ட நாயக்கர் சிறிய தட்டுக்கடை முதலாளியாக மாறிவிட்டார். கடை போட்ட சில நாட்களிலேயே வெங்கட்ட நாயக்கருக்கு வியாபாரத் தந்திரங்கள் அத்துபடியாகின. சீக்கிரமே அந்தக் கடையை ஒரு நல்ல விலைக்குக் கைமாற்றிக் கொடுத்துவிட்டு, ஈரோடு பஜாரில் மிகப் பெரிய மளிகைக்கடையை வாங்கினார். ஈரோடு பஜாரில் மளிகைக் கடை வெங்கட்ட நாயக்கர் என்றால், படுபிரசித்தம் என்கிற அளவுக்கு வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்.
அங்கவஸ்திரம், பட்டு ஜிப்பா, விரல்களில் மின்னலடிக்கும் மோதிரங்கள், பெரிய கல் வீடு, இரண்டு ஏக்கர் நிலம் என கடும் உழைப்பும் புத்தி சாதுர்யமும் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிட்டன.
வாழ்க்கை வசதியாக மாறினாலும், சின்னத்தாயம்மாளுக்குக் குழந்தை இல்லாத பாரம் மனசை அழுத்திக்கொண்டு இருந்தது. மூன்று குழந்தைகள் பிறந்து, அடுத்தடுத்து இறந்து போய்விட, குழந்தை வரம் வேண்டி, கோயில், குளம் எனத் தீவிரமாக ஏறி, இறங்க ஆரம்பித்துவிட்டார். இந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானார். அந்தக் குழந்தை தனக்குச் சாமி தந்த வரம்தான் என மெய்சிலிர்த்து, குழந்தைக்குக் கிருஷ்ணசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதன் பிறகு கேட்க வேண்டுமா..? சின்னத் தாயம்மாளுக்கு 24 மணி நேரமும் கோயில், குளம், அர்ச்சனை, மடி, ஆசாரம், பூஜை, புனஸ்காரம் இவையே வாழ்க்கையாகிப்போனது. இந்தச் சமயத்தில்தான், அவருக்கு இரண்டாவதாகவும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பக்திப் பரவசம் மேலிட, அந்தக் குழந்தைக்கு ராமசாமி என்று பெயர் சூட்டினார். அவர்தான் நம் பெரியார்!
எந்தச் சாமியை அவர் பின்னாளில் தன் வாழ்நாள் முழுக்க மறுத்துப் போராடினாரோ, அந்தச் சாமியின் பெயரையே அவர் வாழ்நாள் பூராவும் சுமக்க நேர்ந்ததுதான் வாழ்க்கையின் விசித்திரம்!
பின்னாளில் இந்த மகன் தனது ஆசார அனுஷ்டானங்களையும் பக்தி நெறிகளையும் முழுவதுமாக அடித்து நொறுக்கப் போகிறான் என்பதை சின்னத்தாயம்மாள் முன் கூட்டியே உணர்ந்துதானோ என்னவோ, சிறு வயதிலிருந்தே தன் இளைய மகன் ராமசாமியிடம் அவ்வளவாக அன்பு பாராட்டாமல், மூத்த மகனையே கொண்டாடிக் கொஞ்சினார். ஏனோ, ஒரு கட்டத்தில், இனி இந்தப் பிள்ளையே தனக்குத் தேவையில்லை என்று, தன் உறவுக்கார விதவைப் பெண் ஒருத்திக்குத் தத்து கொடுத்துவிட்டார்.
சிறு வயதிலேயே தாய் தந்தையரைப் பிரிந்து வாழ நேரிட்டதன் விளைவாக, சிறுவன் ராமசாமிக்குள் தீராத ஒரு வெறுப்பு உணர்ச்சி நெஞ்சில் குடி கொள்ள ஆரம்பித்தது. அதன் பலனாக, கடும் போக்கிரியாக வளர ஆரம்பித்தார்.
அவரை வளர்த்த அந்த விதவைத் தாயின் குடும்பச் சூழல் மிகவும் வறுமை என்பதால், பசிக்கு உணவின்றித் தெருத்தெருவாக அலைந்து, கிடைப்பதைத் தின்று, கண்டவரிடம் வம்பு வளர்த்து, காட்டுச்செடியாக வளர்ந்தார். என்னதான் ராமசாமி ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாலும், அந்த வளர்ப்புத் தாய்க்கு மகனென்றால், அத்தனை பாசம்! யாரேனும் ''ராமசாமி என் பிள்ளையை அடித்துவிட்டான். அவனைக் கண்டித்து வளர்க்கக் கூடாதா?'' எனப் புகார் செய்தால், ''அவன் அப்படித்தான் அடிப்பான். வேண்டுமானால், உன் பிள்ளையை வீட்டிலேயே பூட்டிவைக்க வேண்டியதுதானே!'' எனப் பதில் கேள்வி கேட்டு விரட்டியடிப்பார். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஓர் அன்னியோன்யம். ராமசாமிக்கு யாராவது கையில் சிக்கிவிட்டால் தீர்ந்தது கதை. தன் பேச்சைக் கைதட்டி ரசிக்கத் தோதாக ஆளும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். வயது வித்தியாசமில்லாமல் அவர்களை கிண்டல் செய்து ஓட ஓட விரட்ட ஆரம்பிப்பான். பேச்சு வெறும் வேடிக்கையாக இல்லாமல், அதில் அதிசயிக்கத்தக்க புதிய கருத்துக்களும் இருக்கும் என்பதால் எப்போதும் ஒரு கூட்டம் அவனுடன் கூடியிருக்கும். வளர்ப்புத் தாய்க்கு அது சற்று பெருமையாக இருந்தாலும், நாளை இவன் எப்படி ஆவானோ என்ற கவலையும் எழும்.
அன்று காலை... வாசலில் நிழலாட, வெளியே வந்து பார்த்தார் அந்தத் தாய். வீட்டு வாசலில் வெங்கட்ட நாயக்கர் நின்றிருந்தார்!

வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம். அதன் மிகச் சிறந்த வகுப்பே பால்ய காலம்தான்!
இப்பருவத்தில் நம் மனம் எதிர்கொள்ளும் அனுபவங்களும், அதன் தொடர்பாக உண்டாகும் ஏக்கங்களும், உணர்வுத் தாக்கங்களும்தான் பிற்காலத்தில் ஒரு பிரமாண்ட கட்டடத்தைத் தீர்மானிக்கும் கான்க்ரீட் கம்பிகளாக நீண்டு, நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வடிவமைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. இயல்பாக எல்லாக் குழந்தைகளுக்கும் ஏழு வயது வரை கிடைக்கக்கூடிய தந்தையின் அரவணைப்பும், தாயின் பாசமும், பின்னாளில் 'பெரியார்' என அனைவராலும் கொண்டாடப்பட்ட அன்றைய சிறுவன் ராமசாமிக்குக் கிடைக்கவில்லை.
மண்டிக்கடை வெங்கட்ட நாயக்கர் எனும் ஓரளவு வசதியான தந்தைக்குப் பிறந்தும், பசியும் பட்டினியுமாக வளர்ப்புத் தாயின் வீட்டில் வளர்ந்த அவரது பிஞ்சு மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டதோ, யாருக்குத் தெரியும்? ஆனால், வயிற்றுக்குத்தான் வாழ்க்கை வஞ்சனை செய்ததே தவிர, மனசுக்குக் கடுகளவும் குறை வைக்கவில்லை. வளர்ப்புத் தாயின் அநியாய செல்லம், கட்டுப்பாடில்லாத துணிச்சலையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தது. இதனாலேயே ராமசாமியின் பேச்சிலும் செயலிலும் எக்கச்சக்கமான துடுக்குத்தனம்! வீட்டுத் திண்ணையில் ராமசாமி காலாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை தூரத்தில் பார்த்துவிட்டாலே போதும்... அந்தத் தெரு வழியாக குடுமியும் குடையுமாக நடந்துவரும் பெரிசு கள் வழியில் ஏதேனும் சந்து பொந்து தென்படாதா என வேட் டியை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஓடத்துவங்கிவிடுவர். 'சரி, வீட்டில் இருந்தால்தானே வம்பு! திண் ணைப் பள்ளிக்காவது போகட்டும்' எனத் தன் மகனை அந்த வளர்ப்புத் தாய் அனுப்பி வைக்க, அங்கேயும் கேலி, கிண்டல், வேட்டி அவிழ்ப்பு, அட்டகாசம்! வாத்தியார் எதையெல்லாம் செய்யாதே எனச் சொல்கிறாரோ அதை மறுவிநாடி செய்துவிட்டுத்தான் மறுவேலை!
இப்படியாக ராமசாமி வறுமையிலும் 'செம்மையாய்' காட்டுச்செடியாக வளர்ந்துகொண்டு இருந்த சமயத்தில், அங்கே மண்டி வெங்கட்ட நாயக்கரின் வாழ்க்கை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. வியாபாரத்தில் அவர் தொட்ட உப்பு, புளி, மிளகாய் எல்லாம் தங்கமாக மாறி, சின்னத்தாயம்மாளின் கழுத்தையும் கைகளையும் இடுப்பையும் அட்டிகை யாகவும் வளையல்களாகவும் ஒட்டியாணமாகவும் அலங்கரித்தன. ஏற்கெனவே வைணவ ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் ஊறித்திளைத்த சின்னத்தாயம் மாளுக்கு இப்போது சொல்லவா வேணும்? வீட்டில் தினசரி பூஜைதான்... புனஸ்காரங்கள்தான்! பிராமணர்கள் கூட்டமாக வருவதும், அவர்களை வரவேற்று உபசரித்து, தம்பதி சகித மாய் சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்து வணங்கி, சேவை செய்து, அதனாலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு மகிழ்வதுமே வழக்கமாகிவிட்டிருந்தது. இத்தருணத்தில்தான் சின்னத் தாயம்மாளுக்கு தான் தத்துக் கொடுத்த இளையமகன் ராமசாமி பற்றி ஞாபகம் வந்திருக்கிறது. 'நமக்குதான் இப்போது வசதி வந்துவிட்டதே! சிறியவன் ராமசாமியை அந்த விதவைத் தாயிடமிருந்து அழைத்துக்கொண்டு வந்து விடுங்கள். நாமே வளர்ப்போம்' என்று சொல்ல, மறுபேச்சில்லாமல் புறப்பட்டவர்தான் வெங்கட்ட நாயக் கர்.
பேச்சுத் துணைக்குக்கூட ஆளின்றி தனிமரமாகவே வாழ்ந்து வந்த அந்த விதவைத் தாயின் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு ஓரளவுக்காவது அர்த் தம் இருந்திருக்குமானால், அது ராமசாமி எனும் குழந்தை வந்த பிறகுதான். அவன் சிறுவனாக வளர்ந்து பல சேட்டைகள் செய் தாலும், அவை அனைத்தையும் தன் வறுமையையும் மறந்து ரசித்தார். அதனால்தான் வெங்கட்ட நாயக்கர் தன் வீட்டு முன் வந்து நின்றபோது அவருக்கு திக்கென்றிருந்தது. நாயக்கர் ஒன்பது வயது ராமசாமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்தார்.ஆனால், அந்த விதவைத் தாயின் வேதனையைப் பொருட் படுத்துகிற மனநிலையில் வெங்கட்ட நாயக்கரும் இல்லை; சிறுவனான ராமசாமிக்கும் அதைப் புரிந்துகொள்ளும் வயசு இல்லை. ஈரோட்டில் தனது பணக்கார வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான், ஒரு அந்நியத் தன்மையை ராமசாமியால் உணரமுடிந்தது. சின்னத்தாயம்மாள் மகனிடம் என்னதான் பாசத்தைக் கொட்டியபோதும், ராமசாமியால் அதனை ஏற்கமுடியவில்லை. நன்கு உரமேறி வளர்ந்து வரும் ஒரு மிளகாய்ச் செடியைப் பிடுங்கி, அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு வகை மண்ணில் நடும்போது, அந்தச் செடியின் வேர்கள் படும் வேதனை மனிதர்களின் அறிவுக்கு எட்டுவதில்லை. ராமசாமிக்கும் இந்தப் புதிய வாழ்க்கை அப்படியாகத்தான் இருந்தது. என்னதான் அந்த விதவைத் தாயின் வீட்டில் வறுமை மண்டிக் கிடந்தாலும், அங்கே ஒரு சுதந்திரம் இருந்தது. காலையில் எழுந்தவுடன் குளிக்கவேண்டும், பல் துலக்கவேண்டும் போன்ற கட்டாயங்களோ கட்டளைகளோ அங்கே இல்லை. இங்கே எல்லாமே தலைகீழ்! காலையில் விடிந்தும் விடியாததுமாக சின்னத்தாயம்மாள் தலைக்குக் குளித்துவிட்டு, பூஜை அறையில் சாம்பிராணி புகை போட்டு மணி அடிப்ப தும், பீரோவில் இருக்கும் நகைகளை அள்ளி உடம்பு முழுக்க மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துபோகும் சாமியார்களின் காலில் விழுந்து வணங்குவதும், ராமசாமிக்கு செயற்கையாகவும், மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத அநாவசிய, அர்த்தமற்ற காரியங்களாகவும் தோன்றின. கிராமத்தில் சட்டை இல்லாமல், குடிக்கக் கஞ்சி இல்லாமல், தெருவில் கிடப்பதைப் பொறுக்கித் தின்று, மரம் செடி கொடிகளுடன் காடு மேடு கம்மாங்கரைகளில் இஷ்டம் போல ஆடித் திரிந்த வாழ்வில் ஓர் உண்மை இருந்தாற்போல் சிறுவன் ராமசாமிக்குப்பட்டது. இதனாலேயே தன் தாயாரான சின்னத்தாயம்மாள் செய்யும் எல்லாக் காரியங்களையும் கேள்வி கேட்கத் துவங்கினான். இதை எதற்குச் செய்கிறாய், அதனால் என்ன பலன், ஏன் வெளியாள் வந்து போனதும் வீடு முழுக்கத் தண்ணீர் தெளிக்கிறாய், ஏன் அவர்கள் வந்ததும் ஓடிப்போய் காலில் விழுகிறாய்..? கேள்விகள்... கேள்விகள்..!
'அவங்கெல்லாம் சாமிடா! அப்படியெல்லாம் பேசக் கூடாது!'
'அப்படியா? அப்படின்னா பூஜை அறையில போட்டாவுக்குள்ள இருக்கிற சாமியெல்லாம், முன்னாடி வெச்சிருக்கிற சோத்தைச் சாப்பிட மாட்டேங்குது! இந்த சாமிங்க மட்டும் சம்மணம் போட்டு ஒரு வெட்டு வெட்டுதே, அது எப்படி?'
இது மாதிரியான எடக்குமடக்கான கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாமல் சின்னத் தாயம்மாள் திண்டாடுவதைப் பார்க்கப் பார்க்க ராமசாமிக்கு குஷியாக இருக்கும். அதோடு நில்லாமல், வீட்டுக்கு வரும் பெரிய மனிதர்களிடமும், பிராமணர்களிடமும் ராமசாமி ஏடா கூடமான கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவான்.
'அய்யா! எங்க அப்பா வெங்கட்டா ஏன் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கலை?'
'அடப்பாவி! பொண்டாட்டி உசுரோட இருக்கும்போது இன்னொரு பொண்டாட்டியா? அது மகா பாவம்டா!'
'அப்படின்னா, போட்டாவுல இருக்கிற சாமியும் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு பக்கமும் நிறுத்திக்கிட்டு அதே பாவத்தைதானே செய்யுது?! அப்புறம் எதுக்கு நாம அதை வுழுந்து வுழுந்து கும்புடணும்?'
'நாயக்கர் மவனாச்சேனு பார்த்தேன். இல்ல, அங்கேயே நாலு சாத்து சாத்தியிருப்பேன். முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன கேள்வி கேக்குது பாத்தீங்களா?' எனப் பொருமிக்கொண்டே பெரிசுகள் நாயக்கர் வீட்டைவிட்டு வேகமாக வெளியேறுவது வாடிக்கையானது!
இதனிடையே சின்னத்தாயம்மாளுக்கு பொன்னுத்தாய், கண்ணம்மாள் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், ராமசாமியின் மேல் பாசம் குறையவில்லை. என்னதான் குழந்தை துடுக்குத்தனமாகப் பேசினாலும், வயது ஏற ஏற எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தார்.
உண்மையில், வயது ஏற ஏற அவர் சரியாகவேதான் வளர்ந்தார். ஆனால், மற்றவர்கள்தான் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர்.
இங்கேயும், 'வீட்டிலிருந்தால்தானே வம்பளப்பு! பள்ளி சென்றால் ஒழுங்காகிவிடுவான்' எனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். இம்முறை ஆங்கிலப் படிப்பு. ஆனால், குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் பள்ளிக்கூடத்தால், ராமசாமியின் குண விசேஷங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் ஒரு சமூகத்துக்கே அறிவொளி வழங்கப்போகும் மாணவனை நாம் வதைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாமல், வதைத்து எடுத்தனர். ஒரு கட்டத்தில், ராமசாமியின் கை கால்களில் விலங்கும் மரக்கட்டையும் போட்டுப் பூட்டி, வகுப்பறையில் உட்காரவைக்கும் அளவுக்குப் போய்விட்டது. அது உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கும் மாணவனுக்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவு அல்ல. கெட்டித்துப் போன ஒரு சமூகத்துக்கும் அதன் மடத்தனத்தை அடித்து நொறுக்கவிருக்கும் கலகக்காரனுக்கும் இடையில் பின்னாளில் நிகழவிருக்கும் போரின் முதல் பேரிகை அது!

No comments: