Sunday, October 31, 2010

முள்ளி வாய்க்கால் நிகழ்வு

சென்ற வாரம் விகடனில் விக்கிரமாதித்தன் இதை எழுதியுள்ளார். ஏனோ என் உணர்வுகளும் இப்படித்தான் உள்ளது. என்னுடைய இதே உணர்வுக்கு மேலும் வேறு காரணமும் உண்டு.


நீங்கள் எப்படியோ தெரியாது
நான்
சாதாரணன்
பார்க்கப்போனால்
ரொம்ப சாதாரணன்

படித்துக்கொண்டிருந்த காலத்தில்
இப்படி உணர்ந்ததில்லை
புத்திசாலி மாணவனாக இருந்ததனால்

பத்திரிகையாளனாக வேலை பார்த்த சமயத்தில்
கெத்தாகத்தான் திரிந்திருக்கிறேன்
அது ஏற்படுத்தியிருந்த மதிப்பில்

ஆண் குழந்தையென்று கேட்டதும்
அரசனைப்போலக் கருதிக்கொண்டேன்
அந்த க்ஷணத்தில்

கவிஞனென்றானதும்
கம்பீரமும் கர்வமும் சேர்ந்துகொண்டது
அதெல்லாம் தனி அழகு

அத்தனையும்
போன வருஷம் வரைதான்
இன்றைய தினம்
சாமான்யன்

இப்போதெல்லாம்
நீங்கள் சிகரெட் வாங்கிக்கொண்டு
வரச் சொன்னால் தட்ட மாட்டேன்
'
பாட்டில்' வாங்கி வர ஏவினால்
கௌரவம் பார்க்க மாட்டேன்
பெண்ணே கேட்டாலும்
முடிந்த வரையிலும் முயற்சிப்பேன்
சுயமரியாதை தன்மானம் என்று
நினைக்க மாட்டேன்

முள்ளி வாய்க்கால் நிகழ்வு அப்படி
மாற்றிப்போட்டிருக்கிறது என்னை
இருக்காதா பின்னே
படங்களுடன் செய்திகளைப்
பார்த்ததில் எப்படி
பைத்தியம் பிடிக்காமல்போயிற்று
ஏன் தூக்க மாத்திரை போட்டு
தற்கொலை செய்துகொள்ளவில்லை

டாஸ்மாக்தான்
காப்பாற்றிவைத்திருக்கிறது உண்மையிலேயே
நேரம் காலம் இல்லாமல்
குடித்துக்கொண்டேயிருந்தேன்
தெருவில் விழுந்துகிடந்தேன்

போதை வெறிச்சியில்
பாரதிதாசன் கவிதைகளைக்
கொளுத்தத் தோன்றியது
(இனவுணர்வும் மொழியுணர்வும்
என்ன இழவுக்கு)
திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகளை
தூள்தூளாக உடைத்தெறியத் தோன்றியது
(இத்தனை சீரழிவுக்கும்
யார் காரணம்)
மேலும் ஒரு குவாட்டர் அடித்துவிட்டு
புலம்பிக்கொண்டிருப்பேன்

நாடகம்
முடிந்தது
திரைச்சீலையையும்
தொங்கவிட்டுவிட்டார்கள்

இங்கே
நானும் ரொம்ப ரொம்ப சராசரிதான்!



நன்றி விகடன்

No comments: